வளைகுடா சீதோஷ்ண நிலையில் உணவா , சுவாசிக்கும் உஷ்ண,குளிர்சாதனக் காற்றா எதுவோ மனுசங்களை குண்டு பண்ணியே தீருவேன்னு கங்கணம் கட்டிகிட்டு திரியறது.இங்கிருந்து மீனு மாதிரி கொஞ்சம் தள தளன்னு இந்தியாவுக்குப் போனா ஒரு மாசத்துல திரும்ப வரும்போது காஞ்ச கருவாடு மாதிரி எல்லோரும் திரும்ப வர்றாங்க.அது இந்தியாவில் சுற்றும் அலைச்சலா,உணவா,நீரா,காற்றா எனத் தெரியவில்லை.எப்படியோ பெரும்பாலான இந்தியர்கள் உடல் ஆரோக்கியத்துக்கான உடற்பயிற்சிகளை அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக வைத்துக் கொள்வதில்லை பணம் என்ற பொருளாதார தேவை ஓரளவுக்குப் பூர்த்தியானாலும் கூட.
இந்தியாவில் இதய நோய்கள் அதிகரிக்கின்றன என்ற சமீபத்து செய்தி ஒன்று பார்க்க நேர்ந்தது.அதெப்படி அத்தனை வெயிலில் வேர்த்து விறு விறுத்து பஸ் ஏனைய பயணங்கள் செய்து உழைத்து அலுத்தும் நோய்கள் அதிகரிக்கின்றன.காரணம் இதயம் போன்ற உடல் உறுப்புகளுக்கு தேவையான இரத்த ஓட்டம் சீராக கிடைக்காமல் போவதாலா?பல் துலக்குவது,குளிப்பது மாதிரியான அன்றாட அலுவல்களில் ஒன்றாக கட்டாயம் காலையில் செய்ய வேண்டிய பணி உடற்பயிற்சி.முந்தைய நாளின் சோர்வான மனநிலையையும் உற்சாக கட்டுக்குள் கொண்டு வரும் உடற்பயிற்சி.அதிக நாள் உடற்பயிற்சி செய்யாமல் துவக்கமாக முதல் நாள் ஆரம்பித்தால் அடுத்த நாள் உடல் வலிக்கும்.உடல் வலியையும் பாராது இரண்டாம் நாள் தொடர்ந்தால் மூணாவது நாள் வலி தெரியாது.மூணாவது நாளிலிருந்து இரண்டு வாரம் தொடர்ந்து விட்டால் பயிற்சி பழக்கம் விடாது தொடரும்.
எனக்கு சரக்கு கிடைக்காத ஊர் காரணத்தாலும் அதன் காரணம் கொண்டே மது மீது ஈடுபாடு இல்லாத காரணத்தாலும் மது அருந்துவதில்லை.இருந்தாலும் துறவறம் பூண்டு இல்லறம் பற்றியெல்லாம் சிலப்பதிகாரம் எழுதின இளங்கோ மாதிரி நானும் சில சரக்கு குறிப்புகளை சொல்கிறேன்.பின்னூட்டத்தில் இதுபற்றியெல்லாம் நோண்டக்கூடாது என்ற அன்பு எச்சரிக்கையுடன் சில குறிப்புகள்.
அடப்போய்யா!நானெல்லாம் மட்டை போடற பார்ட்டி.இதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராதுன்னு யாராவது நினைக்கிறவங்களுக்கு அதிகமான உடலுக்கு தேவையில்லாத ஆல்ஹகாலை உடற்பயிற்சி உள் இழுக்கும் காற்று வெளியேற்றும்.சரக்கடிச்சாலும் தவறில்லை உடற்பயிற்சி செய்யுங்கள்.
எனது மதிப்பீட்டில் சரக்கடிப்பது ஒரு கலை.ஆனால் அதனைக் கற்றுத் தேர்ந்தவர்களாய் பெரும்பாலோர் இல்லை.தண்ணி போடற மச்சிக சாராயம்,கள்ள சாராயம்ன்னுதான் கேட்டிருப்பீங்க.இது ரெண்டையும் விட சொந்த சாராயம்ன்னு ஒண்ணு இருக்கறது யாருக்காவது தெரியுமா?தெரியாட்டி தெரியாமலே இருப்பது நல்லது:)
எது சரியான தண்ணி போடற முறைன்னு தெரியல.பிலிப்பைன்ஸ்காரங்க நல்லா சாப்பிட்டு விட்டு சின்ன சின்னதா கல்ப் அடிக்கிறாங்க. நாம் தண்ணி போட்டு முடிஞ்சு அப்புறமா சாப்பிடறோம்.எப்படியோ சரக்கடிச்ச பிறகு வீட்டுக்கு ஒரு கொய்யா மரம் வளர்ப்போம்ன்னு சொல்றதுக்குப் பதிலா ரிலாக்ஸா ஒரு கருப்பு காபி குடிப்பது தலைவலி வராம தடுக்கும்.(உனக்கெப்படி தெரியும்?F&Bல படிச்சது)ஒரு டுனீசியாக்காரன் பழம் சாப்பிட்டு விட்டு உணவருந்துவது விஞ்ஞான பூர்வமா உடலுக்கு நல்லதென்றான்.நாம் சாப்பிட்டு விட்டு பழங்கள் அருந்துகிறோம்.எது சரியான முறை?தெரிந்தவர்கள் கருத்துக்கள் அறிய விரும்புகிறேன்.
கல்லூரிப் பெண்கள் KFC, பிஸாக்களை தவிர்ப்பது நல்லது.அம்மாக்கள் தரும் இட்லி,தோசை,உப்புமா நல்லது.கூட மாட அம்மாக்களுடன் அடுப்பறையில் உதவுவது உடல்,மனரீதியாக உதவும்.
முன்பெல்லாம் பெண்கள் வீட்டு வேலைகளை மட்டும் பார்த்துகிட்டு இருந்தாங்க.இப்ப அந்தப் பளுவோடு அலுவல் வேலைக்குமான பளுவும் வந்து சேர்ந்து பெண்களை யந்திரங்களாகவே மாற்றிய பெருமை ஆண்குலத்துக்கு சேரும்.30 வயதுக்கு மேல் சதை போடுதல்,அப்புறம் சர்க்கரை,அழுத்தம் போன்ற நோய்களை பெண்களும் தவிர்க்க உடற்பயிற்சி கட்டாயம் அவசியம்.குழந்தைப் பேறு காலம் கூட நடை,சின்ன சின்ன வேலைகள் செய்வது அவசியம்.
புள்ளத்தாச்சிங்கிற கரிசனத்துலயும் மருத்துவர்கள் உதவியாலும் சுகப்பிரசவம் வரை எல்லோரும் நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள்.ஆனால் அதற்குப் பிறகான பெண்களுக்கான தாய்மை வாழ்க்கை மாறுபாடும் உடற்பயிற்சிக்கு நிரந்தர ஓய்வைக் கொடுத்துவிடும்.பிரசவத்திற்கு பின்னான அடிவயிற்று சதை தொப்பையை உருவாக்கும் பிரச்சினைகளை பெண்கள் தவறவிட்டு விடுகிறார்கள்.ஒரு மாதம் வயிற்றுப் பகுதிகளுக்கான மஜாஜ்,மற்றும் சுடு நீர் குளியல் அவசியம்.இங்கே ஒரு கேரளத்துப் பெண் புள்ளத்தாச்சிக்கு தண்ணி ஊத்துறேன்ன்னு சொல்லியே ஒரு மாத அட்வான்ஸ் புக்கிங்க் செய்யுது.இந்த தண்ணி ஊத்துற விசயத்தில் பெண்கள் கவனம் கொள்ள வேண்டியது அவசியம்.
அதென்னமோ தெரியல அத்தை,சித்தின்னு அம்மா ஒரு கிலோ,ரெண்டு கிலோ கருப்பட்டியும் அதுல கால்பாதி குருமிளகும் சேர்த்து அரிசு குத்துற கல்லுல உலக்கையால உஸ்,உஸ்ன்னு சத்தம் போட்டுகிட்டே கருப்பட்டியையும்,குருமிளகையும் மாவு பண்ணி உருண்டை செஞ்சு அத்தை,சித்தி,அக்காமார்களுக்கு பிரசவ சமயம் கொடுப்பாங்க.உர்ருன்னு பக்கத்துல நின்னு பார்த்துகிட்டு இருக்கும் எனக்கும் ஒரு விழுது கருப்பட்டி சொரக்குன்னு ருசியா கிடைக்கும்.பிரசவம் சமயத்தில இதைத் தின்னுட்டு அத்தை,சித்திகள்,அக்கம் பக்கத்து அக்கா மார்கள் பத்து நாளோ இல்லை பதினைந்து நாளோ காலத்துக்குள் தண்ணிக் குடத்த எடுத்து இடுப்புல வச்சிக்கிட்டு தண்ணி சுமக்கிற தைரியம் வந்துரும்.இப்ப அரசல்,புரசலா அம்மணி மூலமா சில தாய்மார்கள் குறைகள் கேட்க நேர்ந்தது.தற்காலப் பெண்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கும் கூட திராணியில்லாமல் போய்விடுகிறார்கள்(This is irrelevent of nationality).இந்தப் பெண்கள் எல்லாம் இந்தியா,இலங்கை,பிலிப்பைன்ஸ் ஆசிய நாட்டு வட்டத்துக்குள் வருபவர்கள்.
பரட்டை தலை ஸ்டைல் எல்லாம் முடி உதிர்தலில் கொண்டு வந்து விட்டு விடும்.நல்ல பிள்ளையா தேங்காய் எண்ணெய் தேய்த்து பக்க,நடு வகிடு எடுத்து பள்ளிக்கு,பின்னாடி டை கட்டுற வயசு வரைக்கும் செய்தால் தலை முடி கொட்டுதல்,நரை போன்றவைகளை தள்ளிப் போட முடியும்.கேரளத்துப் பெண்களின் நீண்ட முடிக்கு தேங்காய் எண்ணெய் காரணமென நினைக்கிறேன்.ஷாம்பு குளியல் மாதம் ஒரு முறை வைத்துக் கொள்ளலாம்.நல்லெண்ணெய் குளியல் வாரம் ஒரு முறையும் அதுவே உச்சந்தலைக்கு தினமும் தேய்த்துக் குளிப்பது சூடு குறைக்கும்.கண்ணுக்கு இரண்டு சொட்டு விளக்கெண்ணை தினமும் விட்டுக் கொண்டு பள்ளி,அலுவல் செல்லலாம்.
நிறையப் பேர் மினரல் வாட்டர் அருந்துவது உடலுக்கு நல்லதென்று நினைக்கிறார்கள்.ஆனால் தொடர்ந்து குடிக்கும் மினரல் வாட்டர் கிட்னியில் கல்லைச் சேர்க்கும்.பதிலாக நீரை கொதிக்க வைத்து குடிப்பது நல்லது.
இதெல்லாம் செய்தும் சில சமயம் இருமல்,சளி போன்ற வைரஸ் வைராக்கியர்கள் வந்து விடுவார்கள்.ஒரு முறை இப்படி தொடர் இருமலில் 3 நாட்கள் அவதிப்பட்டு அலோபதி அண்ணன்கள் எதையெல்லாமோ எழுதிக் கொடுத்தும் பலனில்லாமல் நம்ம கிட்னி உபயோகிச்சதுல நல்ல பலன் கிடைத்தது.
தேவையான பொருட்கள்:
பசும்பால் - 250 மில்லி
தேன் - ஒரு தேக்கரண்டி
தண்ணீர் - 25 மில்லி
குங்குமப் பூ- சிட்டிகை தூவற மாதிரி
இஞ்சி - பெரும் விரல் அளவு
குருமிளகு-இடிச்சா பெரும்விரல்,ஆள் காட்டி விரலில் சிக்குமளவு
மஞ்சள்- கொஞ்சமோ கொஞ்சம்
முதலில் தண்ணீரில் வெட்டிய இஞ்சி,மஞ்சளை இட்டு கொதி வந்ததும் பாலை ஊத்தி குருமிளகை தூவவும்.சில நிமிடங்களில் பால் கொதித்து வரும்போது இறக்கி வைத்து ஒரு கப்பில் ஒரு தேக்கரண்டி தேன்,குங்குமம் சிறிது தூவி சூடான பாலை ஊற்றி கலக்கவும்.இருமல்,சளி மருந்து தயார்.
( இதில் இஞ்சி,குருமிளகு,மஞ்சளைத் தவிர்த்தால் இது வயாகராவின் அல்லக்கை)
இறுதியாக ஜன்னல் பக்கத்தில் நின்னுகிட்டு சைட் அடிக்கப் பிடிக்குமா இல்லை ஒரே கடி கடித்த ஆப்பிள் பிடிக்குமான்னு என்னைக் கேட்டால் ஜன்னல் என்றே சொல்வேன்.ஆமா!நம்ம பில்கேட்ஸ் என்ன செஞ்சுகிட்டு இருக்காரு?யாராவது பார்த்தீங்கன்னா ஒரு ஹலோ எனது சார்பா சொல்லுங்க!
Thursday, October 1, 2009
மருத்துவம் பார்க்கலையோ மருத்துவம்!
Posted by
ராஜ நடராஜன்
at
3:00 PM
Links to this post
13
comments
Labels: மருத்துவம்
Tuesday, September 29, 2009
உன்னைப் போல் ஒருவன்,தி வென்ஸ்டே- ஒரு ஒப்பீடு
பொதுவாக ஒரு மொழி திரைப்படத்தை மற்ற மொழிக்கு மாற்றும் போது முந்தைய மொழியின் நிறைகளை தக்க வைத்துக் கொண்டு விட்டுப்போன குறைகளை மாற்றம் செய்வது வியாபார நலன் கருதி செய்யும் தொழில் தந்திரங்கள்.அந்த வகையில் தமிழ் கஜனி இந்தி கஜனி ஆகும்போது இந்தி கஜனி நன்றாக மொட்டை போட்டு,சிக்ஸ் பிக்கெல்லாம் வைத்து நன்றாகவே சண்டை போட்டான்.அதே மாதிரி இந்தி வென்ஸ்ட்டே மூலம், தமிழுக்கு உன்னைப் போல் ஒருவனாகும் போது கதை மாற்றம் இல்லாமல் இருந்தாலும் நடிகர் தேர்வு,இசை,வசனம்,ஒளிப்பதிவு,இயக்கம் என தமிழ் நன்றாகவே இருந்தது.
படம் சார்ந்த இணைய இடுகைகளில் தெரிந்த நுண்ணரசியல்கள் தமிழை விட இந்தியில் அதிகமாகவே பட்டது.ஆனால் அதையெல்லாம் சுட்டிக்காட்ட யாரும் முன்வரவில்லை.உதாரணத்திற்கு காவல்நிலையத்தில் உட்கார்ந்து இருக்கும் நசுருதீன் ஷா வைத்திருக்கும் பையின் J&K எழுத்தைப் பார்த்து விட்டு காவல்துறை FIR எழுதுபவர் விளிக்கும் ஹலோ ஜம்மு & காஷ்மீர்!இந்தியில் வேகாத இந்துத்வா பருப்பெல்லாம் தமிழகத்தின் சூட்டில் நன்றாகவே வேகிறது.இந்தியில் படம் வந்ததும் தெரியவில்லை.போனதும் தெரியவில்லை.இந்தியில் படம் பார்ப்பது என்பது சமூகம் சாராத ஒரு பொழுது போக்கு.ஆனால் இங்கே விமர்சனம் என்ற பெயரில் எழும் விவாதங்கள் நம்மை பல்வேறு திசைகளுக்கு கொண்டு செல்கின்றன.காரணம் நமது திரைப்படம்,அரசியலின் அன்றாட வாழ்க்கையின் ஆளுமைகள். உன்னைப் போல் ஒருவன் தான் திரைப்படம் என்ற பார்வையில் தி வென்ஸ்டேவை விட சிறந்த படம்.ஆனால் நசுருதீன் ஷா,கமல் இருவரின் நடிப்பில் மட்டும், யார் எனக் கேட்கும் அனுபம் கேரின் கேள்விக்கு பதில் அளிக்கும் நசுருதீன் ஷாவின் சமூகக் கோபங்களுக்கான வார்த்தைகளில் வென்ஸ்டேவின் இறுதி நீண்ட வசனங்கள்,நசுருதீன் ஷாவின் நடிப்பை வெற்றியடையச் செய்து விடுகிறது.வசனத்தின் புரிதலின் சமூக கோபங்களில் சில இங்கே:-
அனுபம் கேர்: யார் நீ?
நசுருதீன் ஷா: நான் பஸ்,ரயிலின் படிக்கட்டில் ஏறுவதற்கு பயப்படுகிறவன்.நான் வேலைக்குப் போகிறவன்,சரியாகப் போய் சேர்ந்து விட்டேனா என்று அரைமணி,ஒரு மணி நேரத்துக்கு மனைவியால் விசாரிக்கப் படுபவன்.டீ குடித்தாயா?சாப்பிட்டாயா?நான் உயிரோடிருக்கிறேனா என விசாரிக்கப் படுபவன்.
நான் சில சமயம் மழையில் சிக்கிக் கொள்பவன்,சில சமயம் வெடிகுண்டுக்குள் மாட்டிக்கொள்பவன்.நான் தாடி வைப்பவனை,தொப்பி வைப்பவனைப் பார்த்து பயப்படுகிறவன்.(ஏன் இந்தி பாராட்டும் விமர்சனங்கள் இந்த நுண்ணரசியல் இடைச் செறுகலை நசுருதீன் ஷா மேலோ இந்தி இயக்குநர் மேலோ சுமத்தவில்லை?)வியாபாரத்துக்கு கடை பார்த்தால் என்ன பெயர் வைப்பது என்று யோசிப்பவன்.சண்டை யாருக்கோ இருக்கட்டும்.சாகிறவன் நான்.I am just a stupid common man.தினமும் ரொட்டிக்கான கவனத்தில் இந்த வேலை தாமதமாகி விட்டது.உங்களுக்குத் தெரியுமா?துணி துவைக்கும் சோப்பு கூட குண்டு தயாரிக்கப் பயன்படுகிறதென்று!சாதாரண மனிதனுக்கு இதை விட உபயோகமான பொருள் இதுவரை தயாரிக்கப் படவில்லை.
தவறு நம்முடையது.மிக சீக்கிரம் நிகழ்வுகளைப் பழக்கப் படுத்திக் கொள்கிறோம்.குண்டு வெடிப்பு மாதிரி ஒரு நிகழ்ச்சி நிகழ்ந்தால் சேனல் மாற்றி சேனல் பார்த்து விட்டு,SMS அனுப்பினோமா,போன் செய்தோமா,பின் எனக்கு ஒன்றும் ஆகவில்லையென்று அந்த சூழ்நிலைக்குப் பழக்கப்படுத்திக் கொள்கிறோம்.அரசாங்கம்,காவல்துறை,உளவுத்துறை என பூச்சிக் கொல்லிகள்(Pest controllers) நிறைய இருக்கிறீர்கள்.Why are you not nibbing them in the bud?
All this system is flawed.நாங்கள் இப்படித்தான் உங்களைக் கொல்வோம்.உங்களால் என்ன செய்ய முடியும்? Yes!they asked this question on a Friday and repeated it on a Tuesday and now I am replying back on Wednesday.
Posted by
ராஜ நடராஜன்
at
2:03 PM
Links to this post
35
comments
Labels: திரை விமர்சனம்
Wednesday, September 23, 2009
உன்னைப் போல் ஒருவன்-திரை,சமூக விமர்சனம்
உன்னைப் போல் ஒருவன் படம் எப்ப வெளியீடுன்னு தெரியாம தமிழ்மணம் பக்கம் வந்தா பதிவர்கள் ஆளாளுக்கு விமர்சனம் போட்டுத் தள்ளுறாங்க.கோணங்கள்,பார்வைகள் பலவாக இருந்தாலும் இதுவே படத்தின் வெற்றிக்கான இணையம் சார்ந்த படவிமர்சன வெற்றி எனலாம்.
இது பத்தாதுன்னு உண்மைத் தமிழன் அனைத்து விமர்சனங்களையும் தொகுத்து வழங்கிட்டாரு.நேற்று 30 நிமிட நெடுஞ்சாலை வாகனப் பயணத்துல படத்தையும் பார்த்துட்டு வந்தாச்சு.சரி மக்கள் என்னதான் சொல்றாங்கன்னு அங்கே இங்கேன்னு போய் பார்த்தா படம் ரசிகத்தன்மைக்கும் அப்பால் புலப்படும் இரண்டு விசயங்கள்.ஒன்று யானை தொட்ட பதிவு விமர்சனங்கள்.இரண்டு கமலஹாசன் என்ற பெயர் காரணம் மட்டுமே பட உணர்வுகளுக்கு அப்பால் எழும் வர்ண முலாம் பூசும் விமர்சனங்கள்.ஒரு வட்டத்துக்குள்ளோ அல்லது ஒரு வட்டத்தை சுற்றி வெளியே வர முயற்சிக்கும் திரைப்பட இயக்கங்களுக்கும் அப்பால் கமல் புத்திசாலித்தனமாக பரிட்சித்துப் பார்த்து விடக் கூடாதே:)
படம் ஊத்திக்கணுமுன்னு வேண்டுதலோ அல்லது நாங்கள் சொல்வது என்னவென்று அறிந்தும் அறியாமலிருக்கிறோம் என்ற எண்ணமோ அல்லது மாற்றுக்கருத்துக்கள் என்ற பெயரில் எழும் நுண்ணரசியல் எழுத்தோ அத்தனைக்குமாய் வந்து விழும் விமர்சனங்களையும் மீறி வியாபார ரீதியாக மற்றும் தற்கால சிந்தனை ரீதியாக உன்னைப்போல் ஒருவன் வெற்றி பெறும் என நம்புகிறேன்.
இந்தி பிடிக்காத தமிழக எழுத்துக்களுக்கும் கூட இந்தி வெட்னஸ்டேதான் டாப் என்ற சொல்லாடல்களும் கூட புதன்கிழமைதான் எப்படியிருக்குமென்ற டி.வி.டி ஆவலை தூண்டுகிறது.இருந்தும் மொழிக்கென்று புரிதல் ஒன்று உண்டு.முகம் காட்டாத முதல்வரின் குரல்,செயலாளருடன் கைபேசியில் பேசும் வார்த்தை நுணுக்கங்களை,அரசியிலை இந்தி மூலம் கொண்டுவந்துவிடுமா என்ன?முதல்வரின் செயலாளர் ராகவன் மராருடன் பேசும் வசனங்களின் வீரியம் - முதல்வர் தொட்டு முதல்வரின் செயலாளர் வரை பிரச்சினையிலிருந்து நழுவ முயலும் மனப்பான்மை,சுமையை காவல்துறையிடம் சுமத்தும் அரசியல், அரசுத்துறை (பீரோகிராட்டிக்) மனோபாவம் என்ற மூலப் பிரச்சினைகளை கேமிராவும் வசனமும் பேசுவதை விட்டு விட்டு காமிரா முகப்பூச்சுக்கும் அப்பால் தெரியும் லட்சுமியின் முதுமையை படம் பிடிப்பதில் சிலருக்கு வருத்தம்:)
படம் துவங்கி குண்டு செய்வது எப்படி என்ற சோல்டரிங் நுணுக்கங்களையெல்லாம் காண்பிச்சுட்டு பஸ்,ரயில்,காய்கறி மார்க்கெட்,காவல்நிலையம் தண்ணி வராத ரெஸ்ட்ரூம்ன்னு பல இடத்துலயும் I love India தோள்பையை அங்கங்கே விட்டு விட்டு தக்காளியெல்லாம் வாங்கி,விழுந்த தக்காளிய பொறுக்கி எடுத்துகிட்டு பழைய காலத்து ரயில்வே படுக்கை,ரவுட்டர்,பன்னாட்டுக்கும் சுத்திவரும் சிம்கார்டு,கணினிகள்,துப்பாக்கின்னு கடையப் பரப்பி வியாபாரத்தை ஆரம்பிக்கிறார் கமல்.முதல் போணி ராகவன் மரார் மலையாளத்தமிழும் ரசிக்கும்படியாக உள்ளது.அதுக்குள்ள காவல்துறை அதிகாரிகள்ன்னா இப்படித்தான் இருக்கணும் மாதிரி சேது,ஆரிஃப்ன்னு ரெண்டு பேரு.முயற்சி பண்ணுங்கய்யா!பதவி உயர்வுக்கும்,முன்னுக்கு வருவதற்கும் அறிகுறிகள் நிறையவே தெரிகிறது.TV1 தொலைக்காட்சி பரபரப்பு செய்தியில்லாம அலுவலகத்துல ஹாயா கணினியப் பார்த்துகிட்டு இருக்கும் பெண்செய்தியாளரை பரபரப்பா செய்தி இருக்குது,பொட்டியக் கட்டிகிட்டு சொன்ன இடத்துக்கு வான்னு சொல்லி செய்தியெல்லாம் அலைபரப்பி மோகன்லால் மராரிடம் Can I smoke ன்னு கேட்டு தம் பத்த வைக்கும் நேரம் பார்த்து தம் அடிக்கப் போங்கய்யான்னு துரத்தி விட்டுட்டாரு தியேட்டர்ல பிலிம் காட்டுறவரு!
வாழ்க்கையிலேயே படம் துவங்கி அரைமணி நேரத்துல இடைவெளி விட்ட ஒரே படம் இதுதான்.சரின்னு வெளிய போனா பாப்கார்ன்னுக்கும் பெப்சிக்கும் அலைமோதுற குவைத்தி சின்னபசங்க கூட்டம் தாங்கமுடியாம இரண்டே நிமிடத்தில் திரும்ப இருக்கைக்கு வந்தா படத்தை மறுபடியும் ஆரம்பிச்சுட்டுடாங்க.(நல்லா படம் காட்டுறாங்கய்யா)அப்புறமென்ன வந்து உட்கார்ந்தா அரங்கில் அத்தனை நிசப்தம்.கதை சொல்லும் விதமா?கதையின் கருத்தா?கதாபாத்திரங்களின் ஆளுமையா?எது அரங்கை மவுனிக்க வைக்கிறது?தமிழகத்தைப் போல் வட்டார வழக்குகளுக்கான இடமாக இல்லாமல் வருத்தப்படாத வாலிபர் சங்க மெம்பர்கள்,இலங்கைத் தமிழர்கள்,மோகன்லால் நடிப்பைக் காண வந்திருக்கும் கேரளத்துக்காரர்கள்,தமிழக கலப்பென ஒரு கூட்டமாக இருந்தும் நேரடியாகவோ அல்லது படத்தின் தொலைக்காட்சி மாதிரியான செய்தி அனுபவங்களோ கதையின் மையக்கருவுக்குள் அனைவரையும் கட்டிப் போடுகிறதென்று நினைக்கிறேன்.
திரைக்கதை சொல்லும் முறை,நடிகர்களின் ஆளுமை,வசனம்,காமிரா கோணங்கள் என படத்தை நன்றாகவே நகர்த்தி செல்கிறது இயக்கம்.யதார்த்தங்களை மட்டுமே சொல்வது என்று கதை நகர்வதால் பெஸ்ட் பேக்கரி,மோதி,குஜராத்,கோவை குண்டுவெடிப்பு போன்றவை கதைக்குள் வந்து விடுகின்றது.
சாதாரண மனித வாழ்க்கைக்கும் தீவிரவாதத்திற்குமிடையில் கண்ணுக்குத் தெரியாமல் ஆட்டுவிக்கும் மந்திரவாதிகள் சிலர் பொருளாதாரம்,அரசு பலம்,தொழில் நுணுக்கம்,பொருட்களை கடத்தும் லாஜிஸ்டிக்ஸ்,மதம்,இனவாதம், என்ற குகைக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்.தீவிரவாதத்தின் தொட்டில் எனப்படும் பாகிஸ்தானிய நாட்டிலிருந்து வாழ்க்கையை தக்கவைத்துக்கொள்ள மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் பாகிஸ்தானியர்கள் தையல்காரர்,காருக்கு வர்ணம் அடிப்பவர்,கார் மெக்கானிக்,மரவேலைப்பாடுகள்,எலக்ட்ரிகல்,முடி சீர்திருத்துபவர்,பாகிஸ்தானிய உணவு விடுதி என ஏதோ ஒரு நிலையில் தங்கள் வாழ்வை நகர்த்துகிறார்கள்.ஆனால் விமான நிலையத்தில் போதைப் பொருட்களை கடத்தி மாட்டிக்கொள்பவரும் ஒரு பாகிஸ்தானியராகவே இருக்கிறார்.
நேரில் பேசும் போதும் இந்தியனுக்கும் பாகிஸ்தானியனுக்கும் வித்தியாசம் ஒன்றும் இருப்பதில்லை.இடைச்செருகல்களாக இந்தியனுக்கும் பாகிஸ்தானியனுக்கும் பகை எங்கிருந்து வருகிறது?1947ன் காலகட்ட அரசியல் நிலைகள் அரசாங்க கட்டமைப்புக்குள் இன்னும் ஊட்டி வளர்க்கப்படுகிறதா?இந்தியனுக்கு தேசியவாதம்.பாகிஸ்தானியனுக்கு மதம்.இதில் மதத்தை மட்டுமே பள்ளியில் கற்றுவித்த கோளாறு,அதற்கான அரபு நாடுகளின் பண உதவி,ரஷ்யா,ஈரான்,இந்தியா,சீனா என அனைவரையும் கண்காணிக்க சிறந்த இடம் பாகிஸ்தான் என்ற அமெரிக்காவின் 9/11க்கு முந்தைய திட்டமிடல்(இப்பவும் ஒண்ணும் குறைஞ்சு போயிடல) என்று பரந்து விரிகிறது தீவிரவாதம்.இதுல நம்மூரு இந்துத்வா கட்சி இந்துக்களின் பாரம்பரியம் சொல்வதற்கு கோயில்,குளம்,மட்டை,குட்டை,கட்டிட பிரமிப்புக்கள்,கலாச்சாரம்,வாழ்க்கை முறைன்னு ஆயிரம் இருக்கும் போது நாற்காலி பிடிக்க குறுக்கு வழியா வழியில போற ஓணாணை வலுக்கட்டாயமா பிடிச்சி சட்டைக்குள்ள விட்டுகிட்ட மாதிரி பாபர்மசூதி,குஜராத் சம்பவங்களை முன்னிறுத்தி அதில் குறுக்கு வழியும் தேடிகிட்டு இப்ப நொண்டிகிட்டு நடக்குது.தேறுமா இல்லையா என்பதை எதிர்காலம் கணிக்கும்.இது ஒரு புறம் இருக்க இந்துத்வா பற்றியும் அதன் தீவிரவாதம் பற்றியும் விமர்சனங்கள்,வெறுப்புக்கள் எல்லாம் முன்வைக்கும் போது இஸ்லாமிய தீவிரவாதம் பற்றி குரல்கள் எழுவது குறைவாக இருக்கிறது.நோன்பும்,தொழுகையும்,ஈகையும்,மானுடத்தின் இறுதியின் எளிமையும் எவ்வளவு சிறந்தவை.இவற்றையெல்லாம் குறுகிய எண்ணிக்கை கொண்ட ஆனால் தீவிர உணர்வு கொண்ட சிலர் ஒரு மதத்தையே ஹைஜாக் செய்து விட்டது வருத்தம் கொள்ள வேண்டிய விசயம்.
இந்தியாக்காரன் திரும்ப திரும்ப உலகத்துகிட்ட முக்கியமா அமெரிக்காகாரங்கிட்ட சொன்னானே-பாகிஸ்தான்காரன் திரும்ப திரும்ப அடிக்கிறான்.ரொம்பவே வலிக்குதுன்னு.படத்துல முஷ்ரஃப்,புஷ் பொம்மைக மாதிரி சிரிச்சுகிட்டேயிருந்தாயே!இப்ப உனக்கு வலிக்கும் போது எல்லாமே மாறிப் போச்சு.ஆனாலும் மானுடத்தின் வலியறிந்த காரணத்தால் 9/11ன் துக்கமும் எங்களது துக்கமானது.தீவிரவாதத்தை தீவிரவாதத்தால் வெற்றி கொள்ள முடியுமா?படத்தின் கேள்வி.அப்ப அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் திட்டம் ஜெயித்திருக்கணுமே!படத்தில் லட்சுமி சொல்லும் வசனம் மாதிரி திட்டமிடுதல்,செயல்படுதல் (Planning and Execution) இரண்டையுமே தீவிரவாதிகள் நன்றாகவே செயல்படுத்துகிறார்கள்.மேலும் தீவிரவாதத்தை தீவிரவாதத்தால் ஜெயிப்பதென்பது ஒரு தொடர்நிகழ்வாக ரணமாகிப் போவதற்கான அறிகுறியே அதிகம்,மனிதம் என்ற மருத்துவம் பார்க்காத வரையில்.
கருவறுத்தல் என்ற சொல்லாடல் ஒன்றும் படத்தில் கேட்க நேர்ந்தது.ஒரு இனத்தின் கருவறுத்தல் சோகங்களையும் கமல் வெளிக்கொண்டு வர முயல வேண்டும்.அது ஒரு திரைப்பட ஆவணம் என்ற முறையிலும் உங்கள் கருத்தின் வீச்சின் தூரம் கருதியும் ஒரு சமூக அவலங்களை எதிர்கால சந்ததியை சிந்திக்க வைக்க உதவியாக இருக்கும்.
Posted by
ராஜ நடராஜன்
at
5:00 PM
Links to this post
12
comments
Labels: திரை விமர்சனம்
Thursday, September 17, 2009
ஓம் என்பது சொல்லா?மொழியா?
ரொம்ப நாளா பதிவுலகம் வந்து தலைப்புச் செய்தி மட்டும் பார்த்து விட்டு ஓடிப் போக மட்டுமே உள்ள நேரம் காரணமாக யாருக்கும் அதிகம் பின்னூடமிடவில்லை.அப்புறம் எங்கே பதியறது:)
நேற்றைக்கு அதுசரி,நசரயேன் வீட்டுக்குப் போன மப்பு இன்றைக்கும் தொடர்ந்த காரணத்தால் சரி மக்கள் என்ன சொல்றாங்கன்னு பார்க்கப் போனா கிரி வீட்டுல சன் டிவி ஓடுது:) அப்படியே ஒவ்வொருத்தரையும் 'லுக்' விட்டா வந்து மாட்டினவர் வால்பையன்.என்னதான் சொல்றார்ன்னு பார்க்கப் போய் வந்த வினை இந்த இடுகை.
சாதியம்,மொழி,அரபி,உருதுன்னு தொட்டு இப்படி வந்து முடிச்சார்.
\\ தஞ்சாவூர் பொம்மையாவது ஆட்டிவிட்டால் தான் மண்டையை ஆட்டுகிறது! நம் ஆட்கள் மட்டும் ஏன் எதை சொன்னாலும் மண்டையை ஆட்டுகிறார்கள்!, மொழி எப்படிடா மருத்துவமாகும், ஓம் என்தற்கும் பூம் என்பதற்கும் கிட்டதட்ட ஒரே உச்சரிப்பு தானே வருகிறது! அப்படியே இருந்தாலும் தமிழ் பேசும் போது உள் செல்லும் காற்று மருத்துவ வேலைகள் செய்யாதா!?, என்னத்த சொல்ல, என்னயிருந்தாலும் ரோட்டில் வித்தை காட்டுபவன் ”ரத்தம் கக்குவ” என்று சொன்னது பாக்கெடில் இருப்பதை அள்ளி கொடுத்து வரும் மனிதர்கள் தாமே இங்கிருப்பவர்கள்! \\
இதென்ன நாம முன்பு விட்டுப் போன இடுகையான ஓம் என்ற மந்திரமும் ஹங்கேரி மருத்துவமும் வாடை வீசுகிறேதே என்று பின்னூட்டமிடலாமின்னு நினைச்சா பின்னூட்டம் இடுகையளவு வரும் என்பதால் அடைப்பானின் ஓம் என்பதற்கும் பூம் என்பதற்கும் உள்ள வித்தியாசம் சொல்ல இந்த இடுகை.
முதலாவது ஓம் என்பது ஒரு மொழிக்கான வார்த்தையல்ல.அது ஒரு ஓசை.இல்லை இல்லை அது ஓசை கூட கிடையாது.உள் வெளி மூச்சின் நேரக் கணிப்பு.முந்தைய நாட்களில் தியானம் மனித வாழ்வின் பெரும்பகுதியை எடுத்துக் கொண்ட கால கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஓசையாக இருக்கலாம்.மனதை ஒரு நிலைப் படுத்தவும் மன அலை வரிசை குரங்கு மாதிரி (சும்மா இருந்தாலாவது மனசு நிதானமாத்தான் அங்கே இங்கே தாண்டும்.மனதை ஒரு நிலைப் படுத்த கண்ணை மூடினால் மனம் வினாடிக்கு வினாடி அங்கே இங்கே தாண்டும்) தில்லாலங்கடி செய்யும் (உங்க மொழிதானுங்கோ:)
ஓம் என்பதை சப்தப் படுத்த வேண்டிய அவசியமில்லை.ஓம் என்ற சொல்லின் முதல் எழுத்துக்கு உள்மூச்சு எவ்வளவு கணம் செல்கிறதோ அதே மாதிரி இரண்டாம் எழுத்துக்கு வெளி மூச்சு விடும் நுணுக்கம்.இந்த அளவீடு பூம் க்கு வராது.காரணம் பூ ஒலியும் ம் ஒலியும் மூச்சை வெளியே விடுவதற்கான ஒலியாக எனக்குத் தெரிகிறது.அதென்னமோ தெரியல ஒரு நாள் தமிழ் என்ற சொல்லை உச்சரிக்க இயலுமா என்று முயற்சி செய்து பார்த்தேன்.ரிதம் சரிப்படவில்லை.இட்லிக்கு சட்னிதான் சரியான ஜோடி.இல்ல பொடிதான் சரிப்படும்ன்னு சொன்னா சரிப்படும்!ஆனா சரிப்படாது:)
மற்றபடி இடுகையில் நிறைய பொருள் குற்றம்.அதனைப் பின்னூட்டமிட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.இருந்தும் வளைகுடாவில் வசிப்பதால் அரபி பற்றி சின்ன விளக்கம்.உச்சரிப்பு தமிழ் வித்தியாசப் படறமாதிரி மத்திய கிழக்கு நாடுகளின் பேச்சு வழக்கில் வித்தியாசம் இருக்கிறது.ஒருவன் அரபியில் பேசினால் இந்த நாட்டுக்காரன் அவன் எந்த தேசத்தை சார்ந்த அரபியன் என்று கண்டு பிடித்து விடுவான்.ஆனால் குரான் என்ற எழுத்து மத்திய கிழக்கு நாட்டு மக்களின் ஏகபோக சொந்தம்.அரபிய,பாரசீக,ஹிந்துஸ்தானி,மங்கோலிய மொழிகளின் கலவையாக உருது பிறந்திருக்கலாம். அவை இந்திய படையெடுப்புக்களின் பிள்ளையாக இருக்கலாம் என நினைக்கிறேன்.ஹீப்ரு மீண்டும் புதுப்பிக்கப் படும் சாத்தியங்கள் இருக்கிறது.
தமிழ்?
Posted by
ராஜ நடராஜன்
at
1:40 PM
Links to this post
10
comments
Labels: மொழி
Wednesday, July 8, 2009
ஓம் என்ற மந்திரமும் ஹங்கேரி நாட்டு மருத்துவமும்.
ஓம் என்ற பிரணாயமம் செய்யும் போது ஓ என்ற எழுத்தினை உச்சரிக்கும் போது இதயம்,நுரையீரல் துவங்கி ஒலி புறப்படவேண்டுமாம்.'ம்' என்ற ஒலி எழுப்பும் போது கண்,மூக்கு,தொண்டையில் ஒலி அதிர்வுகள் ஏற்படவேண்டுமாம். அதிர்வுகளின் மூலமாக காது,மூக்கு,தொண்டை போன்ற பகுதிகளில் உருவாகும் நோய்களை குணப்படுத்த ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் ஒரு மருத்துவமனை இயங்குகிறதாம்.உலகின் பல பகுதிகளிலிருந்தும் பல மருத்துவர்கள் வந்து பாடம் கற்றுச் சென்று தங்கள் நாட்டில் இந்த ஒலி மருத்துவத்தை பரப்புகிறார்கள்.(குறட்டைக்காக விவாகரத்து வரை வந்து விடுவதால் இந்த மருத்துவத்தை மேலைநாடுகள் அலட்சியப்படுத்தி விடமுடியாது).
அதே மாதிரி தமிழ்நாட்டிலிருந்தும் ஒரு ENT மருத்துவ நிபுணர் இதனைக் கற்றுக் கொள்ள சென்றுள்ளார்.ஹங்கேரியில் சொல்லிக் கொடுத்த பாடம் இரு உதடுகளையும் இணைத்து "ப்" என்ற ஒலி வரவும் உதடுகள் இரண்டும் அதிரும்படியும் ஒலி எழுப்புவது.மருத்துவ நிபுணர் இந்த ஒலி மருத்துவத்தை எல்லா நாட்டிற்கும் சொல்லிக் கொடுக்கிறீர்களா என்ற கேட்டதற்கு இந்தப் பாடமே எல்லா நாட்டு வருகையாளர்களுக்கும் சொல்லிக் கொடுக்கப்படுகிறது என்ற பதில் வந்ததாம்.
மருத்துவ நிபுணர் மிகவும் ஆச்சரியப்பட்டு இந்த ஒலி மருத்துவம் நம்ம கிராமத்துப் பசங்க பனங்காய்களை சக்கரமாகக் கட்டிக்கொண்டு உதட்டைப் பிதுக்கிக் கொண்டு ப்..ப்..ர்..ர்.ர் என்று பனங்காய் வண்டி ஓட்டும் மருத்துவமாச்சே என்று ஆச்சரியப்பட்டுப் போனார்.இதில் இன்னொரு ஆச்சரியப்பட வேண்டிய விசயம் என்னவென்றால் உலகம் முழுதும் பள்ளிப்பருவ குழந்தைகள் இந்த ஒலியை இயற்கையாகவே கையாளுகிறார்களாம்.(வளைகுடா குழந்தைகள் பள்ளி நேரம் போக,வார இறுதி நாட்கள் தவிர கூட்டில் அடைத்த கோழிகளாய்த்தான் வளர்கிறார்கள்)எனக்கும் நண்பர்களுக்கும் பனங்காய் கிடைக்காததால் ஆமணக்கு மர விசிறிப் பட்டம் மட்டுமே விட்டு டுர்ன்னு வண்டி ஒட்டிய பழைய நினைவுகள் திரும்புகின்றது.
நேச்சுராபதி மருத்துவம் அதிகம் உண்டதாலோ என்னவோ சில சமயம் பாலைவனமெல்லாம் கோபப்பட்டுகிட்டு சகாராப் பாலைவனம் மாதிரி,இல்ல...இல்ல... நம்ம ஊர் கதாநாயகன்,நாயகி கட்டிப் புரளும் ராஜஸ்தான் பாலைவன மண்ணு,தூசியெல்லாம் ஒரேயடியா கோபிச்சிகிட்டு மனுசங்கூட சண்டைக்கு வந்தா எப்படியிருக்குமோ அந்தமாதிரி பாலைதேசத்து மண்தூசிகள் மூக்கைத் துளைத்தாலும் முகமூடியெல்லாம் போடாம அன்றைய தேச இயற்கை மருத்துவம் இன்று வரை தூசர்களிடமிருந்து காக்கிறது.
பனம்பழமே,ஆமணக்கே,வேரில் மணக்கும் மஞ்சளே இன்னும் கண்ணுக்கு முன்னால் வலம் வரும் தேவமருந்துகளே வாழ்க!வாழ்க!கூடவே உச்சரிக்க மறந்த ஓம் என்ற மந்திரமும்.
Posted by
ராஜ நடராஜன்
at
4:04 PM
Links to this post
21
comments
Labels: இயற்கை மருத்துவம்

